Skip to main content

குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும்-ஸ்டாலின்  

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

 

குரூப்-1 தேர்வில் நடந்துள்ள முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பதும், இந்த மோசடி மூலம் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதவிகளில் தேர்வாகி இருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள செய்திகளும் அதிர்ச்சியை அளிக்கின்றன. வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து இரவுபகலாக படித்தும், வெளியூர்களில் இருந்து குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருந்தும் கடன் வாங்கிக் கொண்டு வந்து, சென்னையில் தங்கியிருந்து படித்தும் குரூப்-1 தேர்வுகளை எழுதுகிறார்கள்.

 

stalin

 

ஆனால், 2016 ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில், 74 பதவிகளுக்கு மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்கள் 62 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும், இந்த மையத்தில் வழங்கப்பட்ட மாதிரித் தேர்வுகளில் உள்ள கேள்விகளில் 60 சதவீதம் கேள்விகள் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்டுள்ளன என்பதும் மிகப்பெரிய மோசடியாகவும், நேர்மையாகத் தேர்வு எழுதும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

 

இந்தத் தேர்வில் இமாலய முறைகேடு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமலும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு உதவியாகவும் சென்னை மாநகரக் காவல்துறையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் மாபெரும் துரோகச் செயலாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திற்கு எப்படிக் கிடைத்தது? அதற்கு உடந்தையாக இருந்த முக்கிய புள்ளிகள் யார்? என்பது பற்றியெல்லாம் காவல்துறை விசாரிக்காமல் இருப்பது உள்ளபடியே வேதனை மிகுந்ததாக இருக்கிறது.

 

அதுமட்டுமின்றி, 18.1.2018 அன்று அப்பல்லோ பயிற்சி மையத்தில் நடைபெற்ற காவல்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்பேசிகளில் இருந்த தொலைபேசி எண்கள் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்தது ஏன்? ஒரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளில் சத்துணவு சமையல்காரர் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளவர்களும், மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையமும் ரகசியக் கூட்டணி வைத்து முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.

 

இந்த ஈனச்செயல்கள் எல்லாம் அதிமுக அரசின் புரையோடிப் போன ஊழலுக்கான கறைபடிந்த சாட்சியங்களாக இருக்கின்றன. கேள்வித்தாள், தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்துவது, நேர்முகத்தேர்வின் போது மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட நான்கு கட்டங்களாக நடைபெற்ற 2016 குரூப்-1 தேர்வில், டி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து சத்தியம் தொலைக்காட்சியில் செய்தியாக வெளி வந்தபோது, அந்தத் தொலைக்காட்சி மீதே நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புகார் அளித்து, இந்த இமாலய முறைகேடுகளை ஒட்டுமொத்தமாக மூடி மறைக்க நடைபெற்ற சதிகளும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

 

அதுமட்டுமின்றி, இந்த மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் பின்னணியில் முன்னாள் மேயரும், அதிமுகவின் முக்கிய புள்ளியுமான சைதை துரைசாமியிடம் காவல்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை. அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு முன்ஜாமின் அளிப்பதை அதிமுக அரசு எதிர்க்கவில்லை. குரூப்-1 தேர்வில் நடைபெற்றுள்ள மிக மோசமான இந்த முறைகேட்டை மூடி மறைக்க அதிமுக அரசு வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

ஆகவே, சென்னை மாநகர காவல்துறையிடமிருந்து இந்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த முறைகேட்டிற்குத் துணைபோன தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உயரதிகாரிகள், மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்டவர்களைக் காலம் தாழ்த்தாமல் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2016 குரூப்-1 தேர்வு மட்டுமின்றி, இந்தப் பயிற்சி மையத்தின் முறைகேடுகள் அரசின் மற்ற போட்டித் தேர்வுகளிலும் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.