பல் பிடுங்கிய விவகாரம்; பல்வீர் சிங் மீது புதிய வழக்குகள் பதிவு

CBCID Police registered one more case on Bal veer singh

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. பின் அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

அதேபோல், சுபாஷ் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டியினர் அந்த வழக்குகளை அப்படியே பதிவு செய்து அவர்களின் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் அளித்த புகார் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வேதநாராயணன் என்பவர் அளித்த புகார்களின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பல்வீர் சிங் மீது மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

nellai thirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe