Skip to main content

திமுக எம்.பி. ஆலையில் தொழிலாளி மர்ம மரணம்! ஆதாரங்களை திரட்டும் சி.பி.சி.ஐ.டி! 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

CBCID Investigation on Cuddalore MP Ramesh Factory employee case
                                          எம்.பி. ரமேஷ் மற்றும் கோவிந்தராஜ்

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரின் மகன் மலைக்கன்னி (எ) கோவிந்தராஜ். 60 வயதாகும் இவர், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள, கடலூர் திமுக எம்.பி., டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி காலை முந்திரி ஆலைக்கு வேலைக்குப் போன கோவிந்தராஜ், 20ஆம் தேதி அதிகாலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சடலமாக கிடந்துள்ளார். கோவிந்தராஜ், முந்திரி ஆலையில் முந்திரி திருடியதை எம்.பியின் ஆட்கள் விசாரித்ததால் அவமானத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக எம்.பி. ரமேஷ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

 

ஆனால், எம்.பி.யும், அவரது ஆட்களும் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடுகின்றனர் எனக் கூறி கோவிந்தராஜ் உறவினர்களும், பாமகவினரும் தொடர்ந்து போராடிவருகின்றனர். மேலும், கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவிந்தராஜன் மகன் செந்தில்வேல் வழக்கு தொடுத்தார். அதனடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கோவிந்தராஜன் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

 

மரணமடைந்த கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல், நேற்று முன்தினம் (27.09.2021) டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் 'கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் 7 ஆண்டுகளாக என் தந்தை கோவிந்தராஜ் வேலை பார்த்துவந்தார். என் தந்தையை எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது அடியாட்கள் சேர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். 

 

CBCID Investigation on Cuddalore MP Ramesh Factory employee case
                                                      செந்தில்வேல்

 

அன்று இரவு 10.15 மணியளவில் என் தந்தை மீது பொய் வழக்குப் பதிவுசெய்யும் வகையில், ரமேஷின் உதவியாளர் நடராஜன் மற்றும் சிலர் ரத்த காயங்களுடன் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்த போலீசார் உயிருக்குப் போராடிய என் தந்தையை மருத்துவமனையில் சேர்க்காமல் நிற்க வைத்து படம் எடுத்துள்ளனர். பின்னர் மீண்டும் நடராஜன் மற்றும் அவரது ஆட்களுடன் என் தந்தையை அனுப்பியுள்ளனர். அவர்கள் என் தந்தையை அடித்துக் கொன்றுள்ளனர். அதிகாலை 2.10 மணிக்கு என்னை தொடர்புகொண்டு என் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக ரமேஷின் உதவியாளர் கூறினார்.

 

காடாம்புலியூர் போலீசார், இவ்வழக்கை கொலை என பதிவு செய்யாமல் ரமேஷை காப்பாற்றும் நோக்கில் மர்ம மரணம் என்று பதிந்துள்ளனர். போலீசார் தங்கள் கடமையை சரியாக செய்து என் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். என் தந்தையை அடித்துக் கொன்றதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காடாம்புலியூர் காவல் நிலையம் மற்றும் பண்ருட்டி மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி கோமதி, ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக நேற்று பண்ருட்டி வந்தனர். அவர்கள் பயணியர் விடுதியில் வைத்து காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார், கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல் மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். முன்னதாக நேற்று முன்தினம் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் தீபா, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.