Skip to main content

ஆண்டுதோறும் கர்நாடகாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ்நாடு!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

 

Cauvery water Tamil Nadu is looking forward to Karnataka every year!

 

காவிரி நீருக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அண்டை மாநிலமான கர்நாடகாவை எதிர்பார்த்துக் காத்திருப்பது தொடர்கதையாகிவருகிறது. 

 

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக மாநில அரசு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். ஆனால், அதன்படி ஒருமுறைகூட கர்நாடகா வழங்கியது இல்லை. அங்கு கனமழை பெய்யும்போது மட்டும், தமிழ்நாட்டிற்கு உபரி நீர் கிடைக்கிறது. நீர் பாசன ஆண்டான ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும், அக்டோபர் மாதத்தில் 20.22 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை. ஆனால், நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், பருவமழை காரணமாக, கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதிலாக, இதுவரை 18 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்புவதால் உபரி நீரைத் திறந்து, அதை தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீராக கணக்கிட்டுக்கொள்கிறது கர்நாடக அரசு. அதுமட்டுமின்றி, கர்நாடகாவைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றாத போக்கே தொடர்கிறது.

 

இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள 22 டி.எம்.சி. தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு, மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி நமக்கான பங்கீனைக் கேட்டுப் பெற வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.