Skip to main content

காவிரி மேற்பார்வை ஆணையம் என்பது மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம் - கே.பாலகிருஷ்ணன் 

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
bala

 

காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது மத்திய அரசு. துரோகத்திற்கு துணைபோன எடப்பாடி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

 

காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதிலாக அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி எதிர்பார்த்த மாதிரியே மத்திய அரசு தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. காவரி மேலாண்மை வாரியம் என்பது காவிரி நீரை பங்கிட்டுக்கொடுக்கும் உரிமையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் அமைப்பு. நடுவர் மன்றம் உத்தரவுப்படி நான்கு மாநிலங்களுக்குமான தண்ணீரை அதுவே வினியோகம் செய்யும். ஆனால் மத்திய அரசு அமைத்துள்ள மேற்பார்வை ஆணையத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.  

 

நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதமே மாநிலங்களுக்கு இடையில் எவ்வளவு தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பானது மட்டுமே. நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே தீர்ப்பின் இறுதித்தீர்ப்பில் சாரம்சம். மற்றபடி நடுவர் மற்றம் வரையறுத்துள்ள காவிரி மேலாண்மை வாரியம் அப்படிபே அமுலாகும் என்றே தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறவில்லை என திசைதிருப்புகிறார். அவர் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். படித்துவிட்டு எங்களோடு நேரடியாக விவாத்திற்கு வரட்டும். பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்.

 

பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் ரீதியாக எந்த லாபமும் வரப்போதில்லை. கர்நாடத்திற்கு சாதகமாக நடந்துகொண்டால் அங்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பலனடையலாம் என்பதுதான் மோடி அரசின் கணக்கு. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு அது அனைத்துப் பகுதி மக்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். மோடி அரசு அப்பட்டமான வாக்கு அரசியல் செய்கிறது. காவிரி மேற்பார்வை ஆணையம் என்பது முழுக்க முழுக்க கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மத்திய அரசை எதிர்த்து ஆக்கப்பூர்வமான எந்தப் போராட்டத்தையும் எடப்பாடி அரசு நடத்தவில்லை.  நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் மேலாண்மை வாரியம் உட்பட நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பதில்சொல்ல வேண்டிய நிலை வரும்.  இந்த சங்கடத்தைத் தவிர்பதற்காகவே நாட்டில் இதரக் கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவரவிடாமல் நாடாளுமன்றத்தை கடந்த 15 நாட்களாக அதிமுக முடக்கி வருகிறது. மோடி அரசு எழுதிக்கொடுத்த நாடகத்தை அப்படியே எடப்பாடி அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து பிரதமரை சந்திக்க வேண்டும். சந்திக்க மறுத்தால் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும். ஆனால், மத்திய அரசின் பினாமியாகச் செயல்படும் எடப்பாடி அரசு இதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பில் டெல்டா மாவட்டங்களில் வருகின்ற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு திட்டமிட்டு வருகிறோம். மத்திய அரசு இப்படி ஒரு அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில் உடனடியாக தமிகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்துவதற்குத் திட்டமிடுவோம். இந்த நேரத்தில் தமிழக மக்கள் சும்மா இருந்தால் வரும் தலைமுறையினரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

 

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. அவரிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து அரசின் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து அறநிலையத்துறையில் வைப்பு நிதியாக சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் அங்கு குடியிருப்பவர்களும் பாதுகாக்கப்படுவர். கோவிலுக்கும் நிதி சேரும்.

 

எடப்பாடி அரசின் ஓராண்டு அரசு என்பது கானல் நீரைப்போன்றது. எஸ்.சி, எஸ்டி பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. ஒரு கோடியே 3 லட்சம் இலவச ரேசன் அரிசியை பறிக்கும் திட்டம் உள்ளிட்ட தமிழக நலன்களை மத்திய அரசு பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எடப்பாடி அரசு வாய்மூடி மவுனியாகவே இருக்கிறது. மொத்ததில் இந்த ஆட்சி என்பது தமிழகத்திற்கு ஒரு விபத்தாகவே அமைந்துவிட்டது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனதுபேட்டியில் குறிப்பிட்டார். 

 

பேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.