ADVERTISEMENT

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசின் அரசாணை நகலை தீயிட்டு எரித்த விவசாயிகள்!

04:33 PM Apr 30, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கி மத்திய அரசு தன் வசப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில்தான் தங்கள் வீட்டுவாசலில் சமூக இடைவெளியோடு மத்திய அரசின் அரசாணையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள் விவசாயிகள்.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும் போது, "தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை சட்ட வல்லுநர்களின் கருத்தறியாமல் அவசரக் கோலத்தில் வெளியிடபட்டுள்ளது. இதில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்தும், ஏற்க மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக ஜல்சக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் குடியரசு தலைவரால் கடந்த 20.04.2020 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கி உள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

ஏற்கனவே ஆணையம் அமைப்பு குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான வரையறையை உருவாக்கி உள்ளது. அதன்படி ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் செயல்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், நீர் பாசனத்துறை செயலாளர்கள், தலைமை பொறியாளர்கள் உறுப்பினர்கள் ஆவர். ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீர் பாசனத்தில் புலமை பெற்ற உயர் அதிகாரி தலைவராக மத்திய அமைச்சரவை தேர்வு செய்து உச்சநீதிமன்ற அனுமதியோடு பணியமர்த்த வேண்டும்.

மேலும் ஜல் சக்தி துறை செயலாளர் மத்திய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில் ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். எந்த வகையிலும் ஜல்சக்தி துறை அலுவலக நிர்வாக பட்டியலில் ஆணைய அலுவலக செயல்பாடு இடம் பெற முடியாது.

ஆணையத்திற்கான அலுவலகம் மத்திய அமைச்சரவை செயலாளரின் அலுவலக பட்டியலில் மட்டுமே இடம்பெற முடியும்.

ஆணையத்தில் முழு நேர உறுப்பினர்கள், மற்றும் அலுவலக நிர்வாக செலவினங்கள் சம்பந்தப்பட்டவற்றை மாநிலங்கள்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்திட வேண்டும்.

இதற்கு மத்திய அரசோ , சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் நேரடியாக ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் வரையறுத்துள்ளது.

மேலும் கோதாவரி ஆணையம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எனவே கோதாவரி ஆணையத்தோடு காவிரி ஆணையத்தை ஒப்பிட்டு ஜல்சக்தி துறை முடிவெடுப்பது பொறுத்தமில்லாதது மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதை தமிழக பொதுப்பணித் துறை உணர வேண்டும். மேலும் ஜல் சக்தி துறை அதிகாரிகள் சொல்வது போல் இது சாதாரண அலுவலக நடைமுறையாக இருக்கும் பட்சத்தில் குடியரசு தலைவர் அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏன்?

உண்மை நிலைமை இவ்வாறு இருக்க தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை அவசர கோலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஜல்சக்தி துறை அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டு அதனடிப்படையில் கவனக்குறைவாகவும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வறிக்கையால் தமிழக காவிரி உரிமை பறிபோய்விடுமோ? என அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை பெற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக விவசாயிகளின் நலன் கருதி குடியரசு தலைவரின் அரசாணையை ரத்து செய்வதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அவசர நடவடிக்கைகளை மேற்க்கொள்வதோடு, வரும் 2ம் தேதி நடைபெற உள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மாணம் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் முன் வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்றார்.

அப்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.மனோகரன் உடன் இருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT