Skip to main content

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசின் அரசாணை நகலை தீயிட்டு எரித்த விவசாயிகள்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

Cauvery Management Board issue

 

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கி மத்திய அரசு தன் வசப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில்தான் தங்கள் வீட்டுவாசலில் சமூக இடைவெளியோடு மத்திய அரசின் அரசாணையை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள் விவசாயிகள். 


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும் போது, "தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை சட்ட வல்லுநர்களின் கருத்தறியாமல் அவசரக் கோலத்தில் வெளியிடபட்டுள்ளது. இதில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்தும், ஏற்க மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக ஜல்சக்தி துறை நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் குடியரசு தலைவரால் கடந்த 20.04.2020 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கி உள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

ஏற்கனவே ஆணையம் அமைப்பு குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான வரையறையை உருவாக்கி உள்ளது. அதன்படி ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் செயல்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், நீர் பாசனத்துறை செயலாளர்கள், தலைமை பொறியாளர்கள் உறுப்பினர்கள் ஆவர். ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீர் பாசனத்தில் புலமை பெற்ற உயர் அதிகாரி தலைவராக மத்திய அமைச்சரவை தேர்வு செய்து உச்சநீதிமன்ற அனுமதியோடு பணியமர்த்த வேண்டும். 

மேலும் ஜல் சக்தி துறை செயலாளர் மத்திய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில்  ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். எந்த வகையிலும் ஜல்சக்தி துறை அலுவலக நிர்வாக பட்டியலில் ஆணைய அலுவலக செயல்பாடு இடம் பெற முடியாது. 

ஆணையத்திற்கான அலுவலகம் மத்திய அமைச்சரவை செயலாளரின் அலுவலக  பட்டியலில் மட்டுமே இடம்பெற முடியும். 

ஆணையத்தில் முழு நேர உறுப்பினர்கள், மற்றும் அலுவலக நிர்வாக செலவினங்கள் சம்பந்தப்பட்டவற்றை மாநிலங்கள்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு  செய்திட வேண்டும். 

இதற்கு மத்திய அரசோ , சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் நேரடியாக ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் வரையறுத்துள்ளது. 

மேலும் கோதாவரி ஆணையம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எனவே கோதாவரி ஆணையத்தோடு காவிரி ஆணையத்தை ஒப்பிட்டு ஜல்சக்தி துறை முடிவெடுப்பது பொறுத்தமில்லாதது மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதை தமிழக பொதுப்பணித் துறை உணர வேண்டும். மேலும் ஜல் சக்தி துறை அதிகாரிகள் சொல்வது போல் இது சாதாரண அலுவலக நடைமுறையாக இருக்கும் பட்சத்தில் குடியரசு தலைவர் அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏன்?

உண்மை நிலைமை இவ்வாறு இருக்க தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை அவசர கோலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஜல்சக்தி துறை அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டு அதனடிப்படையில் கவனக்குறைவாகவும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வறிக்கையால் தமிழக காவிரி உரிமை பறிபோய்விடுமோ? என அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை பெற்று உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக விவசாயிகளின் நலன் கருதி குடியரசு தலைவரின் அரசாணையை ரத்து செய்வதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அவசர நடவடிக்கைகளை மேற்க்கொள்வதோடு, வரும் 2ம் தேதி நடைபெற உள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மாணம் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் முன் வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்றார்.

அப்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.மனோகரன் உடன் இருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.