Skip to main content

காவிரி ஆணைய உரிமை பறிக்கும் மோடி அரசுக்கு எடப்பாடி அரசு துணை போவதேன்? பெ. மணியரசன் கண்டனம்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

காவிரி ஆணைய உரிமை பறிக்கும் மோடி அரசுக்கு எடப்பாடி அரசு துணை போவதேன்? என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

P. Maniyarasan




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னதிகாரமுள்ள அமைப்பாக செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) அமைச்சக அதிகாரத்தின் கீழ் செயல்படும் கீழமை அலுவலகமாக நரேந்திர மோடி ஆட்சி மாற்றியுள்ள அநீதியைத் தமிழ்நாடு அரசு ஆதரித்து, அதனால் ஆபத்தில்லை என்று அறிக்கை கொடுத்திருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், 29.04.2020 அன்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், தனித்தனியே செயல்பட்ட இரண்டு துறைகளை இணைத்து நடுவண் அரசு ஜல்சக்தி (நீராற்றல்) அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது, அதற்கான விதிகளில் செய்துள்ள திருத்தங்களைத்தான் நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இது காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அதிகாரங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை, இதுகுறித்து நடுவண் அரசு அதிகாரிகளைக் கேட்டு உறுதி செய்து கொண்டோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுவண் நீராற்றல் துறையின் அன்றாட நிர்வாகப் பணி விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஏற்கெனவே உள்ள விதி 7ஐ அடுத்து 7A சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 7A-யின்படி இனிமேல் ஆறுகளின் தண்ணீர்ப் பாதுகாப்பு, வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு ஆகியவை சார்ந்த அதிகாரங்கள் நடுவண் நீராற்றல்துறை அதிகாரத்தின் கீழ் வரும்.

அடுத்து, ஏற்கெனவே உள்ள விதி 33-க்குக் கீழ் 33A, B, C, D, E பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி 33C - கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம், 33D – கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், 33E – காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை நடுவண் அரசின் நீராற்றல் துறையின் அன்றாட நிர்வாக விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வரையறுத்தத் தன்னதிகார விதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று 16.02.2018 அன்று உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒட்டுமொத்தப் பணிகளை அதன் தலைவர் மற்றும் அதிகாரிகள் தீர்மானித்துச் செயல்படுத்துவார்கள். இதன் அன்றாடப் பணிகளை காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதிகாரிகளும் செயல்படுத்துவார்கள். இவற்றின் கூட்டத்தைக் கூட்டுவது, நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, முடிவுகளைச் செயல்படுத்துவது உள்ளிட்ட அதிகாரங்கள் இவ்விரு அமைப்புகளிடம் இருக்கின்றன. இப்பணிகளில் நடுவண் நீராற்றல் (ஜல்சக்தி) துறை தலையிட எங்கே இடம் இருக்கிறது? இனிமேல் மோடி அரசு ஓட்டை போட்டால்தான்! அந்த ஓட்டைகள்தாம் திருத்தம் 7A மற்றும் 33 A, B, C, D, E ஆகியவை.

இந்த ஓட்டைகளை அடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு – இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இவற்றை ஆதரித்துப் பக்கவாத்தியம் வாசிப்பது ஏன்? தமிழ்நாட்டில் இந்த விதித் திருத்தங்கள் தொடர்பாக மக்களிடம் – கட்சிகளிடம் – உழவர் அமைப்புகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுபற்றி வெளிப்படையாக விளக்க அறிக்கை கொடுங்கள் என்றாவது இந்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டிருக்கலாம் அல்லவா? இதையெல்லாம் விடுத்து, தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் வஞ்சகச் செயலுக்கு எடப்பாடியார் வாழ்த்துக் கூறுகிறார்.

2018 சூன் மாதத்திலிருந்து செயல்படும் காவிரி ஆணையத்திற்குத் தனிப்பொறுப்புள்ள முழுநேரத் தலைவர் ஒருவரை அமர்த்தும்படி வாதாடிப் பெற்றாரா முதலமைச்சர்? இல்லை! நடுவண் நீர்வள  ஆணையத்தின் தலைவரின் ஓய்வுநேரப் பணியாகக் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பணி தொடர்கிறது.

ஏற்கெனவே நீர்வளத்துறை என்று செயல்பட்ட இன்றைய நீராற்றல்துறை தானே கர்நாடகம் மேகதாது அணை கட்டப் பச்சைக் கொடி காட்டி அதனிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை வாங்கி வைத்துள்ளது! இதே நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடும்போதெல்லாம், மேக்கேதாட்டு அணை கட்டுவது பறறிய பொருளை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து வைத்து வருகிறார். இனி தமிழ்நாட்டு எதிர்ப்பைத் துச்சமாக ஒதுக்கிவிட்டு மேக்கேதாட்டு அணை கட்ட இந்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது.

கரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிறது மோடி அரசு. அதற்குத் துணைபோய் துரோகம் இழைக்கிறது எடப்பாடி அரசு. நீராற்றல் துறையின் திருத்த விதிகளைக் கைவிடச் செய்ய ஊரடங்கைக் கடைபிடித்துக் கொண்டே போராடுவோம்! இதற்கான அறப்போராட்டத்தை முடிவு செய்வதற்கு 01.05.2020 அன்று காவிரி உரிமை மீட்புக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு காணொலி வழியில் நடக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

"Karnataka government is creating an artificial crisis" - Chief Minister's speech in the assembly

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரையை தமிழக முதல்வர் தொடங்கினார். அவரது உரையில், '' இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராகத் திறந்து விடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டும் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு சீரமைக்கப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021-22 ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது.

 

இந்த ஆண்டில் ஜூன் ஒன்று நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்த 69.7 டி.எம்.சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணையைக் குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சிக்கு மேலாக உள்ளபோது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக இருந்தது. மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம். நமது உழவர் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவை பயிர் இந்த ஆண்டும் சிறப்பாகப் பயிரிட அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடகா மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் விரிவாகச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையைக் காப்பதில் திமுக உறுதியுடன் இருக்கும்'' என்றார்.

 

 

Next Story

சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்; மோடியை சந்திக்கும் கர்நாடக எம்.பிக்கள் குழு

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Cauvery issue that is heating up; A group of Karnataka MPs to meet Modi

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையிலும் தற்பொழுது வரை நீர் திறக்கப்படவில்லை. நேற்று காவிரி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று மாலையே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 

தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் இன்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர்.

 

Cauvery issue that is heating up; A group of Karnataka MPs to meet Modi

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், 'கர்நாடக அரசுக்கு தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை. காவிரி விவகாரத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது; எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

 

Cauvery issue that is heating up; A group of Karnataka MPs to meet Modi

 

இந்தநிலையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், கர்நாடக அரசு சார்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு நாளை டெல்லி செல்ல உள்ளது. பிரதமர் மோடி, அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை இக்குழு சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் நாளை டெல்லியில் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகனும் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.