Skip to main content

கடைமடைக்கு வந்த காவிரி... விதை, கற்பூரம், மலர்தூவி வரவேற்று மகிழ்ந்த விவசாயிகள்!!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
 Cauvery  comes to kadaimadai

 

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு ஜூன் 12 ந் தேதி மேட்டூரில், காவிரி தண்ணீர் முதல்வர் எடப்பாடியால் திறக்கப்பட்டு 16ந் தேதி கல்லணையில் பாசனத்திற்காக அமைச்சர்களால் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வரும் வழி எங்கும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்று வணங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் நீர், தஞ்சை மாவட்டத்திற்குள் நுழைந்து கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு இன்று காலை முதல் வரத் தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகா தொடங்கி ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகா வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வரை நேரடியாகவும், ஏரிகள் மூலமும் பாசத்திற்கு வரவேண்டிய காவிரி தண்ணீர் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு காலத்தோடு காவிரி வருவதைக் காண வந்த இளைஞர்கள் தங்கள் செல்போன்களுடன் காத்திருந்து செல்ஃபி, முகநூல் நேரலை என படங்களும், வீடியோக்களையும் வெளியிட்டு மகிழ்ந்தனர்.

 

 Cauvery  comes to kadaimadai


இன்று காலை நெடுவாசல் வந்த தண்ணீர் மீண்டும் தஞ்சை மாவட்டம் ஆவணம், ஏனாதிகரம்பை, பைங்கால் வழியாக வந்து மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்குள் மாலை 3 மணிக்கு வந்தடைந்தது. பைங்கால் தண்ணீர் வந்துவிட்டதை அறிந்த மேற்பனைக்காடு விவசாயிகள் பூ, பழம், கற்பூரம், நவதாணி விதைகளுடன் தயாராக காத்திருந்தனர். வீரமாகாளி அம்மன் கோயில் கீழ்பாலத்தில் தண்ணீா் இறங்கியதுமே உற்சாகமடைந்து ஆற்றுக்குள் இறங்கி. அழுக்கும், செடி செத்தைகளுடன் நுரையுடன் வந்த புதிய தண்ணீரில் கால்களை நனைத்து ஆனந்தமடைந்த விவசாயிகள் தயாராக வைத்திருந்த மலர்கள், விதைகளை தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி வரவேற்றனர்.

பல வருடங்களுக்கு பிறகு காலத்தோடு வரும் காவிரியை வணங்கி வரவேற்கிறோம் கடைமடை வரை கால தாமதம் இன்றி தொடர்ந்து தண்ணீர் வந்து சேர்ந்தால் குறுவையும், சம்பாவும் அறுவடை செய்யமுடியும். அதற்கு இயற்கையும் மழையை கொடுக்க வேண்டும். அரசாங்கங்களும் இணைந்து தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.