ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் கொசுக்களும் ஈக்களும் உற்பத்தியாகி வரும் நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி அதிக அளவில் பரவி வருகின்றது.
காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களும் பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் என தினசரி 500க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை முழுவதும் நோயாளிகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவு பகுதியில் கூட்டம் கூட்டமாக கம்பளி பூச்சிகளும் அட்டை பூச்சிகளும் படை எடுத்து வருவதால் நோயாளிகள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் கம்பளி பூச்சிக்கு பயந்து உள்நோயாளிகள் மருத்துவமனையின் வெளிப்பகுதிக்கு வந்தாலும் தரைப்பகுதிகளிலும், நடைபாதைகளிலும் கம்பளி பூச்சிகளும் அட்டைபூச்சிகளும் வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்களும் மருத்துவர்களும் திணறி வருகின்றனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் தெரிவிக்கும்போது, "எங்கு பார்த்தாலும் கம்பளிப்பூச்சி இருப்பதாகவும், படுக்கை அறைக்குள் வருவதாகவும் மேலும் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் ஊர்ந்து வந்து கொண்டிருப்பதால் அச்சமாக உள்ளது எனவும் உடனடியாக கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனவும் தெரிவித்தனர்.