ADVERTISEMENT

நாங்குநேரியில் மீண்டும் பரபரப்பு; அரசு பள்ளி சுவற்றில் சாதிய வாசகங்கள்

04:23 PM Sep 07, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவம், சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியுள்ளது. இந்தப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறான வாசகங்களை எழுதியிருந்தனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இது குறித்து நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், நாங்குநேரி துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, காவல் ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு சுவற்றில் எழுதியிருந்த அவதூறு வாசகங்களை அழித்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் 4 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 மாணவர்களையும் கைது செய்தனர். கைதான 4 மாணவர்களும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறாக எழுதியிருந்த 4 மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT