caste certificate youth and police incident villupuram district collector office

விழுப்புரம் மாவட்டம், கோலியனூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (20 வயது). இவர் விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தாம் காட்டுநாயக்கன் சாதியைச் சார்ந்தவர் என்றும், அதற்கான சான்றிதழை கல்லூரியில் சமர்ப்பிப்பதற்காக சான்றிதழ் தருமாறும் கேட்டு முறைப்படி ஏற்கனவே விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

Advertisment

அங்கிருந்த அலுவலர்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் (30/12/2021) கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மகேந்திரன் அதிகாரிகளைச் சந்தித்து தனக்கு சாதிச் சான்றிதழை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அலுவலர்கள், அவரை காலையிலிருந்து மாலை வரை அலைக்கழித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மகேந்திரன் இரவு 10.00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தனி நபராக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

caste certificate youth and police incident villupuram district collector office

Advertisment

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் மகேந்திரனைசந்தித்து அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, வந்த விழுப்புரம் சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் கணபதி என்பவர், திடீரென இளைஞர் மகேந்திரனின் சட்டையைப் பிடித்து, அவரைத் தாக்கித் தரதரவென பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.

இதைக்கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும், இதை பார்த்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சியைப் பார்த்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் வாலிபர் மகேந்திரனைத் தாக்கிய இன்ஸ்பெக்டர் கணபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.