A case was filed against the person who prepared a fake heir certificate to join the Salem Corporation!

Advertisment

சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியில் சேர்ந்த பெண்ணுக்கு போலி வாரிசு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மேற்கு வட்டாட்சியர் அருள்பிரகாஷ், சூரமங்கலம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், ''சேலம் மாநகராட்சி 21வது கோட்டத்தில் தூய்மைப் பணியாளராக உமா என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பணியில் சேர்ந்தபோது, மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டதாக சமர்ப்பித்த வாரிசு சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இந்த போலி சான்றிதழை, வட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் சுற்றித் திரியும் மேட்டூர் பொட்டனேரியைச் சேர்ந்த பரமேஷ்வரன் என்பவர் போலியாக தயாரித்து வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில்போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பரமேஷ்வரன் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர், வேறு யார் யாருக்கெல்லாம் இதேபோல் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளார்? இதில்வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைநடந்து வருகிறது.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, போலி வாரிசு சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த தூய்மைப் பணியாளர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அது மட்டுமின்றி, வாரிசுரிமை அடிப்படையில் பணியில் சேர்ந்த அனைத்துப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.