Skip to main content

‘ஆந்திர அரசு மீது வழக்கு தொடர வேண்டும்.. ’ - தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
'A case should be filed against Andhra Govt..' - Tamilnadu farmers insist

ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிகுப்பம் பகுதியில் அடிக்கல் நாட்டினார். இந்தத் தடுப்பணை ரூ.215 கோடியில் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் மூலம், ஆந்திர அரசு 0.6 டி.எம்.சி. நீரை தேக்கிவைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நீரினை குப்பம் தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பூர்த்தி செய்யவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 1892 மைசூர் ராஜ்ஜியம் மற்றும் சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தை மீறி அராஜக போக்குடன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தனித்துவமாக செயல்படும் ஆந்திர அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் முல்லை மற்றும் அசோகன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்கள் கலந்து கொண்டன.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.