Case seeking relief for koyambedu small traders! - Government of Tamil Nadu ordered to respond!

Advertisment

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையின் 1,256 சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு 196 கடைகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டன. சிறு வியாபாரிகளுக்கு கடைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திருமழிசையில் இருந்து கோயம்பேடு சந்தை, கடந்த செப்டம்பர் 28 -ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சிறிய கடைகளைத் திறப்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Advertisment

இதனால், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை சிறு வியாபாரிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் உஷா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தது.