மத்திய கூட்டுறவு நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜீவா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு..!

Case seeking departmental action against Central Cooperative Managing Director Dr. Jeeva ..!

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தின் செயல்பாடுகளை தடுக்க முற்படும் அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜீவா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை, மூன்று வாரங்களில் பரீசிலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பாண்டியன் (அதிமுக) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கூட்டுறவு சங்கங்கள் சட்டப்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயக்குனர்கள் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்ற விதி உள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதியின் காரணமாக கூட்டம் தள்ளிப்போனதாகவும், தேர்தலுக்கு பின் தற்போது இயக்குனர்கள் கூட்டம் நடத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரும்,மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஜீவாவை அணுகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தனது கோரிக்கையை பரீசிலிக்காமல் தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நிர்வாக இயக்குனர் தன்னைஅவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும், முறைகேடான வகையில் சட்டத்திற்கு புறம்பாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை தடுக்க முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் தனக்கான பணியை செய்ய தவறிய மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனரான ஜீவா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் கடந்த மே மாதம் 25ம் தேதி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டுமென கோரிய இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு நடைபெற்று வந்தது.

தொடர்ந்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை மூன்று வாரங்களில் பரீசிலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe