
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி, கடந்த வியாழக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியின் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உக்கடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்திலிருந்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்து 'ஜஸ்டிஸ் ஃபார் பொன் தாரணி' என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை துணை ஆணையர் ஜெயசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)