நெல்லை சி.எஸ்.ஐ திருச்சபை திருமண்டலத்தில் இருதரப்புக்கு இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக எம்.பி ஞானதிரவியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜான் பள்ளியில் தாளாளராக இருந்த திமுக எம்.பி ஞானதிரவியத்தை அந்த பதவியில் இருந்து மறை மாவட்ட ஆயர் நீக்கினார். இதனால் அங்கு சென்ற ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் மத போதகரைத் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு எம்.பி ஞானதிரவியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைமை. அதில், “எம்.பி ஞானதிரவியம் கழக வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமை கழகத்திற்குப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இச்செயல் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இக்கடிதம் கிடைத்த ஏழு நாள்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விளக்கம் அளிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கத் தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக எம்.பி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்கப்பட்ட மதபோதகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானதிரவியம், சி.எஸ்.ஐ திருச்சபை பள்ளியில் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மீது பாளையங்கோட்டை போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.