Skip to main content

ராஜேந்திர பாலாஜி மீது ஐ.பி.சி. 420 உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு! 

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

 Case Registered on Rajendra Balaji under three sections including IPC 420

 

ஆவினில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு புகார்களில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரி மகனான ஆனந்துக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தர, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பியிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளார். வேலை வாங்கித்தராத நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, பணத்தை திருப்பிக்கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயநல்லதம்பி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், அதன் மீது விசாரணை நடத்தினர். 

 

அந்த விசாரணையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயநல்லத்தம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் இந்தப் புகாரில் தொடர்பிருப்பதைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவர் மீதும், மோசடி உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

 

 Case Registered on Rajendra Balaji under three sections including IPC 420
                                                     விஜயநல்லதம்பி

 

இதற்கிடையே, ராஜேந்திர பாலாஜி பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ. 3 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜயநல்லதம்பி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் முத்துபாண்டி, பாபு ராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீது 406, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயநல்லத்தம்பி, ராஜேந்திர பாலாஜி மீது ரூ. 3 கோடி மோசடி புகார் தெரிவித்தபோது, அதுகுறித்து “எளிய குடும்பத்தில் பிறந்த நான், அரசியலில் பொதுநல சிந்தனையோடு பணியாற்றிவருகிறேன். உள்ளாட்சி பொறுப்பு வகித்தபோதும், அமைச்சராக இருந்தபோதும், சட்ட விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதே இல்லை. நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பது என்னோடு பழகியவர்களுக்கும், நான் பெரிதும் மதிக்கும் தொண்டர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டே வாழ்கிறேன். ஆனால், திட்டமிட்டே அவதூறு செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. விஜய நல்லதம்பி என்ற மோசடி பேர்வழி மீதுள்ள பல்வேறு வழக்குகள் குறித்து விருதுநகர் மாவட்டம் மட்டுமல்ல.. தமிழகமே நன்கறியும். அவருக்கும் எனக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக என் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். இதற்கு முன் பல கட்சிகளில் இருந்தபோதும், தன் மீது புகார் வரும்போது யாராவது ஒரு விஐபி மீது பழி சுமத்துவதை, விஜய நல்லதம்பி வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இவர் போன்றவர்களிடம் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.” என்று ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘என் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் மீது 8க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.