Skip to main content

தீபாராதனை தட்டை பறித்து, தூக்கி எறிந்து பக்தரைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு..!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

Case registered against chidambaram natarajar temple Dikshitars who snatched Deeparadhana's plate from the devotee

 

சாமிக்கு மலர் தூவி தீபாராதனைக் காட்டிய பக்தரின் தீபாராதனை தட்டை பறித்து தூக்கி எறிந்தும், அவரது சட்டையைப் பிடித்து இழுத்தும் தாக்கிய தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 29ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி (நேற்று) தரிசன விழாவும் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

 

தேர் திருவிழா முடிந்த அன்று மாலை தேரிலிருந்து இறங்கி கோவிலுக்கு கீழ சன்னதி வாயிலாக சாமி ஊர்வலம் செல்லும் வழியில், கோவில் வாசலில் உள்ள கீழ சன்னதியில் வசிக்கும் பக்தர் பாலசுப்பிரமணியம் (65), சாமி தூரத்தில் வரும்போது மற்றவர்களைப் போல் பூக்கள் தூவி தீபாராதனைக் காட்டியுள்ளார். மற்றவர்களை எதுவும் சொல்லாத தீட்சிதர்கள் பாலசுப்பிரமணியத்திடம்  எதிர்ப்பு தெரிவித்து அவரது தீபாராதனை தட்டை பறித்து தூக்கி எறிந்தும், அவரது சட்டையைப் பிடித்து இழுத்தும் தாக்கியுள்ளனர்.

 

இதனை காவல்துறையினர் தடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி அவர்களைத் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியம், சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஸ்ரீ வர்ஷன், முத்து, சோமு உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த கையோடு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், “நாங்கள் பரம்பரை பரம்பரையாக சாமி வரும்போது தீபாராதனை காட்டுவது வழக்கம்.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்தது. அப்போது கருவறையில் தேவாரம், திருவாசகம் பாட தமிழகத்திலுள்ள சிவனடியார்களை அழைத்துவந்து கருவறை முன்பு நிற்கவைத்து தேவாரம், திருவாசகம் பாட அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்தேன்.  

 

Case registered against chidambaram natarajar temple Dikshitars who snatched Deeparadhana's plate from the devotee

 

நான், தமிழர் தேசிய முன்னணி இயக்கத்தின் கடலூர் மாவட்ட பொருளாளராக உள்ளேன். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அன்றைய தினத்திலிருந்து என்மீது பகையுடன் நடந்துகொள்கிறார்கள். சித்சபையில் தீட்சிதர்கள் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது, அப்படியே பாடினாலும் சித்சபையில் கீழே நின்றுதான் பாட வேண்டும். சித்சபையில் நின்று தேவாரம் பாட வேண்டும் என்ற ஆறுமுகசாமியின் தொடர் போராட்டத்தில்தான் கோவிலை அரசு கையகப்படுத்தியது. எனவே, இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்களால் ஒவ்வொரு தேர் மற்றும் தரிசன விழாவிலும் இதுபோன்று தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது.  இது குறித்து அவ்வப்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தால் சி.எஸ்.ஆர். காபியுடன் சமாதானம் முடிந்துவிடும். தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்ய வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.