Case registered against BJP executive who threatened  to Peep Biryani

கோவை உடையம்பாளையம் பகுதியில் ரவி - ஆபிதா தம்பதியினர் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக ஓ.பி.சி அணி நிர்வாகி சுப்பிரமணி என்பவர், தள்ளுவண்டிக் கடைக்கு வந்து, இங்கே பீப் பிரியாணி எல்லாம் விற்க கூடாது என்று மிரட்டியுள்ளார்.

மேலும், “கடையில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி வேண்டுமானால் விற்றுக்கொள்ளுங்கள்; மாட்டிறைச்சி மட்டும் விற்க கூடாது. யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வாங்க.. இது ஊர் கட்டுப்பாடு” என்று மிரட்டியுள்ளார். இதற்கு ஆபிதா, “நாங்கள் யாரை வற்புறுத்திச் சாப்பிட வைக்கவில்லை. பக்கத்துக் கடையில் மீன் எல்லாம் விற்பனை செய்கிறார்கள், அதையும் எடுக்கச் சொல்லுங்கள்; நாங்களும் எடுக்கிறோம் என்று என்று கேட்க, ஆத்திரமடைந்த சுப்பிரமணியோ, அதெல்லாம் எடுக்கச் சொல்ல முடியாது; இங்க மாட்டிறைச்சி விற்க கூடாதுன்னா விற்க கூடாதுதான்” என்று கறார் காட்டியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது. இதுகுறித்து அந்த தம்பதியினர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுப்பிரமணி மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் சுப்பிரமணி மீது இரு பிரிவினர் இடையே வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே சம்பவம் குறித்துப் பேசிய தம்பதியினர், சுப்பிரமணி தொடர்ந்து இதுபோன்று மிரட்டல் விடுவதால் தங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.