Skip to main content

இன்ஸ்டா மோகம்; தூண்டிவிட்ட ஃபாலோயர் - தொக்காய் சிக்கிய இன்ஃப்ளூயன்சர்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

case has been registered under section 3 against bike and bathed road on Instagram

 

இன்ஸ்டாகிராமில் விடுத்த 10 ரூபாய் போட்டியை ஏற்று மொபட்டில் சென்று நடு ரோட்டில் குளித்த வாலிபர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூ.3,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் ஒன்றாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளது. இங்கு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, திருவேங்கட வீதி சாலை ஆகிய 5 சாலைகள் இணைகிறது. இதில், மாவட்ட எஸ்.பி. அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஜவுளிச் சந்தை, வணிக வளாகங்கள் இயங்கி வருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இருந்து கொண்டே இருக்கும். 

 

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், சிக்னலில் வந்து நின்றார். பின்னர், மொபட்டில் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில்... மக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் குளிக்கத் தொடங்கினார். இதனை அவரைப் பின்தொடர்ந்து வந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிக்னல் விழுந்தும் செல்லாமல் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அவர் உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாகக் குளித்துக் கொண்டிருந்தார். பின்னர், அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் எச்சரிக்க அவர் அங்கிருந்து சென்றார்.

 

இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, நடு ரோட்டில் குளித்த வாலிபர், வெள்ளோட்டினைச் சேர்ந்த பார்த்திபன்(26). இவர், இன்ஸ்டாகிரம் மூலம் அவரது ஃபலோவர்கள் அளிக்கும் சவால்களை ஏற்பார். அதன்படி, ஒருவர் 10 ரூபாய் தருகிறேன். நடு ரோட்டில் குளிக்கும் படி சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்று, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடு ரோட்டில் குளித்து, சவாலுக்கான ரூ.10-ஐயும் பெற்றார். பார்த்திபன் ஏற்கனவே இரவு நேரத்தில் நடு ரோட்டில் தூங்குவது, பச்சை மீன்கள் சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை செய்துள்ளார். பார்த்திபன் குளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பார்த்திபன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இந்நிலையில் நேற்று, பார்த்திபனை ஈரோடு டவுன் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். இதனை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஹெல்மெட் அணியாமல் வருதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது என 3 பிரிவின் கீழ் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனுக்கு ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது. இவரைப் போன்று இளைஞர்கள் யாரும் இந்த விபரீத செயலில் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது