Skip to main content

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு !

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

கரூர் புதிய மாவட்டமாக உதயமான பிறகு தாந்தோன்றிமலை, வெள்ளியணைக்கு இடையே இருந்த கோயில் நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களை அப்போதைய அரசு நிர்வாகம் பெருந்திட்ட வளாகம் அமைக்க கையகப்படுத்தியது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் கட்டப்பட்டன. இந்த நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலம் அளித்த சிலர் இழப்பீடு போதவில்லை என்றும், சிலர் நிலத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுவுடன் கோர்ட்டின் உதவியை நாடினார்கள்.

 

case filed on lady officer at karur

 

 

கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் பைபாஸ் சாலை பகுதியில் 6.75 ஏக்கர் நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த இடத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவருக்கு கரூர் வருவாய்த்துறையினர் சப்டிவிசன் செய்து பட்டா வழங்கியுள்ளதாக கரூர் கலெக்டர் அன்பழகனுக்கு தகவல் கிடைத்தது.

கலெக்டர் உத்தரவின் பேரில் கரூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி அதை ஊர்ஜிதம் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் அமுதா தலைமை நில அளவையர் சாகுல் அமீது, வட்ட நில அளவையர் சித்ரா என மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ, கரூர் மாவட்ட குற்றப்பிரிவிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரில் 1998 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சர்வே எண் 148, 779, 786, 783, 784, 748, 790, 793, 797, ஆகிய நிலங்களை கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்காக ஆர்ஜிதம் செய்து அதற்கான இழப்பீடு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கரூர் தாசில்தார் அமுதா, தலைமை நில அளவையர் சாகுல் அமீது, நில அளவியல் சித்ரா ஆகியோர் சர்வேஎண் 793 பட்டா, சிட்டா ஆகியவற்றை சரவணன் மற்றும் முருகானந்தம் என்பவருக்கு அளித்துள்ளனர் . எனவே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் மீது எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் கரூர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.