
மதுரையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள்ளாக (28.04.2025) அனைத்து பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி மற்றும் பிற அமைப்புகள், சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்” என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் அமர்வில் நேற்று முன்தினம் (18.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒரு நிலையான வழிகாட்டு முறை தயாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதி, “நிலையான வழிகாட்டு முறை தயாரிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் ஏன் அரசியல் கட்சி கூட்டங்களை பொது இடத்தில் அமைக்க அனுமதி வழங்குகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட முறையான அனுமதி இல்லாமல் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்ட வருகிறது. பொது இடங்களில் கட்சி கூட்டங்கள் மற்றும் கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?. இல்லையெனில் ஒவ்வொரு கொடிக் கம்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தமிழகத்தில் கட்சி பொதுக் கூட்டங்கள் மற்றும் கட்சியின் கொடிக் கம்பங்களுக்குக் கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு (02.07.2025) நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக் கொடிகளையும், சின்னங்களையும் காட்சிப்படுத்துவதற்கும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் அரசியலமைப்பின் படி அடிப்படை உரிமை உள்ளது. எனவே பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிகளை அகற்றக்கூடாது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிக் கொடிகளைத் தமிழகம் முழுவதும் அகற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று (20.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் வாதிடுகையில், “அனைத்து அரசியல் கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றுவதற்குத் தடைகோரிய மனு இரு அமர்வு கொண்ட நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.