Skip to main content

நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்ச வேட்டை; கூட்டுறவுச் சங்க செயலாளர் மீது வழக்கு!      

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

case  filed against  secretary of the cooperative society who asked for a bribe

 

சேந்தமங்கலம் அருகே, நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் வசூலித்த கூட்டுறவுச் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.    

 

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் கர்ணன். இவர், மூன்று நாள்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு  காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: சேந்தமங்கலம் பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர், கடந்த 2021ம் ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 2021 மார்ச் 31ம் தேதி வரை 5 பவுனுக்குக் கீழ் நகை அடமானக் கடன் பெற்றவர்களுக்கு முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் 311 பேர் இந்தத்  திட்டத்தில் பயனாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.     

 

இந்த சங்கத்தின் உறுப்பினர் யுவராணி என்பவர், 30 கிராம் நகையை அடமானம் வைத்து, கடந்த 29.1.2021ம் தேதி 89 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அவர், கடன் தள்ளுபடி சான்றிதழ் கேட்டு, சங்க செயலாளர் (பொறுப்பு) கோவிந்தராஜை அணுகியுள்ளார். அப்போது அவர், 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், நகை அடமானக் கடன் தள்ளுபடி சான்றிதழை உடனடியாக கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார். யுவராணியிடம் மட்டுமின்றி, கீர்த்தனா, சந்திரா, சீனிவாசன், சிலம்பரசன் ஆகிய உறுப்பினர்களிடமும் லஞ்சம் கேட்டுள்ளார்.     

 

மேலும், 28.3.2022ம் தேதி, கந்தசாமி என்ற உறுப்பினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க 1500 ரூபாய் லஞ்சம் வசூலித்துள்ளதாகவும்,  துணைப் பதிவாளர் கர்ணன் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி சுபாஷினி நடத்திய முதல்கட்ட விசாரணையில், கோவிந்தராஜ் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது லஞ்சம் கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.