
சென்னையில் சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் லோகேஸ்வரன். இவர் கடந்த 2022 - 2024 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். அப்போது ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் பிரபாகரன், பசுவந்தனை காவல் நிலையத்தில் கிரேடு ஒன் போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் ஆகியோருக்கு மாற்று பணியாக டி.எஸ்.பி. லோகேஸ்வரனின் சிறுப்பு குழுவில் வேலைப் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எம்.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களை வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் டிரைவர் செல்வகுமார் என்பவர் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மருதன் வாழ்வு மங்கம்மா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது டி.எஸ்.பி. லோகேஸ்வரனின் சிறப்பு குழுவை சேர்ந்த பிரபகாரன், சரவணன் ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் டிப்பர் லாரியை வழி மறித்துள்ளனர். உடனே லாரி டிரைவர் செல்வகுமார், உரிமையாளர் மகாராஜனுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மகாராஜன், லாரியை பிடித்து வைத்திருந்த பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோரிடம் தனது லாரியை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். டிஎஸ்பி அறிவுறுத்தலின் பேரில் லாரியை மறித்ததாக கூறி லாரியை விடுவிக்க மறுத்துள்ளனர். புளியம்பட்டி எஸ்.ஐ. கண்ணன் வேண்டுகோளின் பேரில் தான், குண்டும் குழியுமாக உள்ள மணியாச்சி சாலையை சீரமைக்க சரள் மண் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்போதே எஸ்.ஐ. கண்ணனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். அவர் அங்கிருந்த சிறப்பு குழுவைச் சேர்ந்த காவலர்களிடம் பேச முயன்ற போது பேச மறுத்துத் தவிர்த்துள்ளனர்.
தொடர்ந்து விடாப்பிடியாக இருந்த அவர்கள், டிஎஸ்பிக்கு ரூ.1 லட்சமும், தங்களுக்கு ரூ.50 ஆயிரமும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே லாரியை விடுவிப்போம். இல்லையென்றால் லாரியை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்வோம் என மகாராஜனை மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி காவலர்கள் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோரிடம் லாரி உரிமையாளர் மகாராஜன் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற பிறகே லாரியை அங்கிருந்து விடுவித்துள்ளனர். பின்னர் இது குறித்து அதே நாளில் மார்ச் 31ஆம் தேதி காலை 11 மணியளவில் மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரனை நேரில் சந்தித்த மகாராஜன், தன்னிடமிருந்து ரூபாய் 1 லட்சம் சிறப்பு டீம் போலீசார் லஞ்சமாக கேட்டு பெற்றதாகவும், மேலும் ரூபாய் 50 ஆயிரம் தங்களுக்கு லஞ்சமாக வழங்குமாறு கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
சிறப்பு குழ போலீசார் தனக்குத் தெரியாமல் தனது பெயரை பயன்படுத்தி லஞ்சம் வாங்கியதாக தெரிவித்த டிஎஸ்பி லோகேஸ்வரன், குற்றச்சாட்டு குறித்து எள்ளளவும் கண்டு கொள்ளாமல், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் அலட்சியமாக இருந்துள்ளார். டிஎஸ்பியின் சிறப்பு குழுவிலேயே அந்த இருவரையும் வழக்கம்போல பணியை தொடர அனுமதித்துள்ளார்.
மார்ச் 31 ஆம் தேதி டி.எஸ்.பி. லோகேஸ்வரனை சந்தித்து புகார் தெரிவித்த பிறகும் கூட, அந்த இரண்டு வசூல் காவலர்களும் தங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று ஏப்ரல் 14ஆம் தேதி வரை லாரி உரிமையாளர் மகாராஜனை கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் மகாராஜன் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைக்கப் போவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் விரக்தியடைந்த மகாராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2023 ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மணியாச்சி டி.எஸ்.பி. அலுவலகம் சென்று அங்கு தீக்குளிக்க முயன்றுள்ளார். அன்றைக்கு விவகாரம் விஸ்வரூபம் ஆனதை தொடர்ந்து டிஎஸ்பி லோகேஸ்வரன் தனது வீட்டிலிருந்து டிரைவர் சக்திநாதன், கன் மேன் சுதர்சன் ஆகிய இரண்டு காவலர்கள் மூலம் ரூபாய் 1 லட்சத்தை கொடுத்தனுப்பி அன்று இரவு 10.45 மணியளவில் மகாராஜன் வீட்டுக்கு சென்று அவரிடம் திரும்ப ஒப்படைக்கச் செய்துள்ளார்.

இந்த தகவல்களை எல்லாம் உளவுத்துறை வழியாக அறிந்து களமிறங்கிய தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தங்கள் பாணியில் புலனாய்வு செய்து தகுந்த ஆதார ஆவணங்களை கைப்பற்றி, டிஎஸ்பி லோகேஸ்வரன், தலைமை காவலர் பிரபாகரன், போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு குறிப்பு எழுதி அனுப்பி இருந்தனர். அரசுத்துறை செயலர்களிடமிருந்து ஜூன் 12 ஆம் தேதி வரப்பெற்ற அனுமதி தகவலை தொடர்ந்து, தற்போது சென்னை சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பி ஆக பணியாற்றும் என்.லோகேஸ்வரன், தற்போது குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் எஸ். பிரபாகரன் (721), திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம் பணியாற்றி வரும் போலீஸ் கான்ஸ்டபிள் பி.சரவணன்(2119) ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தென் மண்டல காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணியாச்சி சப் டிவிஷனில் டி.எஸ்.பியாக லோகேஸ்வரன் பணியாற்றிய 1.8.2022 முதல் 23.8.2024 வரையிலான காலகட்டத்தில், அவரது தாய் நாகம்மாள், தந்தை நடராஜன் ஆகியோருக்கு, தலைமைக் காவலர் பிரபாகரன், டிரைவர் சக்திநாதன், கன் மேன் சுதர்சன் ஆகியோர் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்து பெரும் தொகையை டெபாசிட் செய்திருப்பதும், சேலம் மாவட்டம் அரிய பாளையம் கிராமத்தில் 2023 ஆம் ஆண்டில் தாய் நாகம்மாள் பெயரில் ஏக்கர் கணக்கில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதும், தலைமை காவலர் பிரபாகரனும், போலீஸ் கான்ஸ்டபிள் சரவணனும் தங்கள் பெற்றோர் பெயரில் வங்கிகளில் முதலீடு செய்திருப்பதும், சொத்துக்கள் வாங்கியிருப்பதும், டிஎஸ்பி லோகேஸ்வரன், தலைமை காவலர் பிரபாகரன் காவலர் சரவணன் ஆகிய மூன்று பேர் கூட்டணி அமைத்து பல்வேறு குற்றவியல் சதியில் ஈடுபட்டு இருப்பதும், கூட்டாளிகளை சட்டவிரோத செயல்களை செய்ய ஊக்குவித்து அதன் மூலம் பெரிய அளவில் டிஎஸ்பி லோகேஷ்வரன் பணத்தைச் சுருட்டியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகி அது விஜிலென்ஸ் எப்.ஐ.ஆர்.ல் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர் மகாராஜன் நம்மிடம் தெரிவித்த போது, “எங்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கின விஷயத்தை கூட நான் பெருசுபடுத்த நினைக்கல. ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான். நல்லா இருங்கன்னு விட்டுட்டேன். ஆனால் டிஎஸ்பி லோகேஸ்வரனும், போலீஸ்காரங்க பிரபாகரனும், சரவணனும் எனக்கு கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் தான் என் மனைவி, குழந்தைகளுடன் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க சென்றோம். அன்னைக்கு எங்க கூட நாங்க வளர்க்கிற எங்கள் நாயும் கூட வந்தது. டிஎஸ்பி கேம்ப் ஆபீஸ்ல நிறைய நாய் கிடக்குது. எங்க வீட்டு நாயை பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் எல்லாம் குரைத்து சண்டை போட்டது. இந்த சத்தத்தை கேட்டு தான் போலீஸ்காரங்க வெளிய வந்தாங்க. இல்லைனா அன்னைக்கு என் குடும்பம் நெருப்புல செத்துருக்கும். அந்த சம்பவத்துக்கு பிறகு, டிஎஸ்பி கொடுத்தனுப்பியதா சொல்லி ராத்திரியே கொண்டு வந்து பணத்தை கொடுத்தாங்க. அதுக்கு பிறகும் பிரச்னை ஓயவில்லை. அந்த ஸ்பெஷல் டீம் வசூல் போலீஸ்காரங்க தரப்பில் இருந்து, நாங்க சொல்ற இடத்தில எல்லாம் கொண்டு போய் சரள் லோடு இறக்கு என எனக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது சம்பந்தமா டிஎஸ்பிகிட்ட சொன்னபோது அவர் ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்லை. தலைமை காவலர் பிரபாகர் தரப்பிலிருந்து எனக்கு மறைமுகமா கொலை மிரட்டல் வந்தது. அந்த தகவலும் ஒரு சில பார்ட்டிகள் மூலமா எனக்கு தெரிய வந்தது. லஞ்ச புகார் தொடர்பா விஜிலென்ஸ் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் விசாரணை செய்தாங்க. அந்த சமயத்தில் கூட ஒரு சில பெரிய மனுசங்க எங்கிட்ட வந்து உனக்கு 5 லட்சம் பணம் தருகிறோம். நான் தான் விருப்பத்தோட போலீஸ்காரங்க பையில பணத்தை வைத்தேன்னு சொல்லுன்னு சொன்னாங்க. நான் அப்படியெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.
தூத்துக்குடியில் ஏ டி எஸ் பி விசாரணை, கோவில்பட்டி டிஎஸ்பி ஆபிஸ்ல வைத்து விசாரணை என என்னை அழைத்து விசாரித்த போது அங்கிருந்த போலீஸ்காரங்க என் மொபைலை வாங்கி அதில் இருந்த ஆடியோவை எல்லாம் டெலிட் செய்திட்டு மொபைலை கொடுத்துட்டாங்க. எனக்கு அந்த ஸ்பெஷல் டீம் வசூல் போலீஸ்காரங்க கொடுத்த தொல்லைக்கு தெய்வம் என்னைக்குமே விடாதுன்னு நினைச்சேன். அது இப்போ நடந்திருச்சு சார்...” என மிகுந்த மன வலியுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி