‘விசித்திரன்’ என்ற தலைப்பை பயன்படுத்தி திரைப்படம் எடுக்கத் தடை கோரிய வழக்கில், தயாரிப்பாளர் பாலா, இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015ஆம் ஆண்டு, ‘விசித்திரன்’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ‘விசித்திரன்’ என்ற அதே தலைப்பை பயன்படுத்தி ‘பி ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலாவும், இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷும் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது ‘விசித்திரன்’ தலைப்பில் படத்தைத் தயாரிப்பதற்கு தடை விதிக்கக்கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு குறித்து, பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் பாலா மற்றும் இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.