CHENNAI WATER

ஊரடங்கு தளர்வால் மக்கள் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால்,கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசிலிக்க, குடிநீர் வழங்கல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில், மக்கள், தங்கள் கைகளைக் கழுவுவதற்கும், அத்தியாவசிய தேவைக்குமான தண்ணீரை வினியோகிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அதில், "சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை பெருநகர குடிநீர் வாரியம், 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. அதனால், கரோனா பாதிப்பு நீங்கும் வரை, தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய, குடிநீர் வாரியத்துக்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில், ஏற்கனவே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கிலும் மக்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு, மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தரப்பில், கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக, சொந்த ஊரில் இருந்து அதிகளவில் மக்கள் சென்னைக்குத் திரும்பி வருவதால், சென்னைக்கு 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனத் தெரிவித்தார்.

Ad

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.