பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவுக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல தமிழக காவல்துறை தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இது குறித்த அரசின் செயல்முறை ஆணைகள், திருச்சுழி – உலகுத்தேவன்பட்டி கிராமத்தினர் மத்தியிலும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் செல்ல முயற்சித்தனர்.
இச்செயலைத் தடுக்க முயன்ற திருச்சுழி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உமாசங்கரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்து, குருபூஜைக்குச் சென்றுவிட்டனர். சிறப்பு சார்பு ஆய்வாளர் உமாசங்கர் அளித்த புகாரின் பேரில், திருச்சுழி காவல்நிலையம், சம்பந்தப்பட்ட உலகுத்தேவன்பட்டி கிராமத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.