Advertisment

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Case against Isha Foundation; High Court action order

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளுவாம்பட்டியில் மின் தகன மேடை ஒன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என். சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியானது குடியிருப்பு பகுதி ஆகும். இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே மின் தகன மேடையை அமைக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மனுதாரர் வசிக்கும் பகுதி குருட்டுப்பள்ளம் ஆகும். அப்பகுதியில் மனுதாரர் மட்டுமே உள்ளார். மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த குடியிருப்பு வாசிகளும் இல்லை. மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளார். இவர்கள் போலியான முகவரியைச் சமர்ப்பித்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடையால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உள் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

Case against Isha Foundation; High Court action order

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “மின் தகன மேடையால் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் தகன மேடை அமைக்கும் முன்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆட்சேபனையைக் கேட்காமல் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். அப்போது ஈஷா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் குறுக்கிட்டு வாதிடுகையில், “அந்தத் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அங்கு நவீன முறையில் எல்.பி.ஜி. எரிவாயு மூலமாக உடல்கள் எரியூட்டப்படவுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு (25.06.2024) ஒத்தி வைத்துள்ளனர்.

Coimbatore Isha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe