7.5 சதவீத ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பாக, மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.
மேலும், மனுதாரர் தரப்பில், ‘7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் மூலம் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுகின்றனர். இது மருத்துவர்களின் தரத்தைப் பாதிக்கிறது.’ எனத் தெரிவிக்கப்பட்டது.
‘மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், கவுன்சிலிங்கை நிறுத்த முடியாது. இதற்கிடையில் தலையிடவும் முடியாது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்..’ எனக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், ‘மனுவாகத் தாக்கல் செய்தால், வழக்கு விசாரணை பட்டியலுக்கு வரும்போது பரிசீலிக்கலாம்..’ என்றும் தெரிவித்தனர்.