கரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக தவறான தகவல் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த உமர் பரூக் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20-ம் தேதி வரை இந்தியா வந்தவர்களைத் தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர, பொதுக்கூட்டம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கவில்லை. டில்லியில் உரிய அனுமதி பெற்றே மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Case for action against media for spreading false information against specific communities!

இது சம்பந்தமாக சில வீடியோ காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதாக புகார் தெரிவித்த மனுதாரர், அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையே ஒளிபரப்ப வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், டில்லியில் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கரோனா பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவிப்பதாகவும், அதனை ஊடகங்கள், மிகைப்படுத்தி செய்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக டி.ஜி.பி க்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.