ADVERTISEMENT

அடுத்தடுத்து நடந்த சம்பவம்; சாலையின் நடுவே கொழுந்துவிட்டு எரிந்த கார்கள்

06:10 PM Apr 22, 2024 | ArunPrakash

அரியலூர் அருகே உள்ள செட்டி திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவி செல்வம்பாள். இருவரும் பிரிங்கியம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கருங்காலி கொட்டாய் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ராமசாமி திடீரென சாலையில் இருந்து திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராமசாமி மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி உயிரிழந்தார், அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

ADVERTISEMENT

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரை நெய்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த நிலையில் இசக்கி முத்து காரின் பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் விபத்து நடந்த காரின் மீது மோதாமல் இருக்க, தனது காரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த நேரத்தில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அறிவொளி என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருக்க, அவர் கார் மீது ஜெயக்குமார் கார் மோதியுள்ளது. எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதியதில் தீ பற்றியது. இதனால் காரில் இருந்தவர்கள் அவசர அவசரமாக இறங்கி உயிர்தப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இரு கார்களும் சாலையில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க, தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த கார்களின் மீது தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் தப்பிக்க முயன்ற போது, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT