
கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சார் ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் சார் ஆட்சியரான ராஜாமணி கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தனி பிரிவு ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலையில் சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சியிலிருந்து அவருடைய அரசாங்க காரில் சென்றுள்ளார். அப்பொழுது சங்கராபுரத்தை நெருங்கியவுடன் திடீரென கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த 5 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் டயர் வெடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us