Skip to main content

வயர்லெஸ்சில் கேட்ட கார் நம்பர்... நேரில் பார்த்ததும் விடாப்பிடியாக விரட்டிய காவலர் - குவியும் பாராட்டுகள்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

The car number heard on the wireless ... The policeman who stubbornly chased after seeing it in person

 

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணி என்றாலும், டி.எஸ்.பி. செங்கமலகண்ணனின் கார் ஓட்டுநராக உள்ளார். புதன்கிழமை மணிக்கூண்டு பகுதியில் ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கச் சென்றபோது, அந்த வழியாக கடைவீதியில் சென்ற ஒரு காரைப் பார்த்ததும் இமைப்பொழுதில் அந்தக் கார் நம்பர், அடையாளங்களை சில நாட்களுக்கு முன்பு காவல்துறை வயர்லெஸ் மூலம் கேட்டது அவர் நினைவுக்கு வந்துள்ளது. உடனே அந்தக் காரை நிறுத்த கைகளால் சைகை காட்ட, கார் நிறுத்தாமல் சென்றதால் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றபோது கடைவீதியில் வேகமாக காரை ஓட்ட முடியாத நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடினார்கள்.

 

தனது மோட்டார் சைக்கிளையும் நிறுத்திவிட்டு ஓடியவர்களை விரட்டிச் சென்ற முதல்நிலைக் காவலர் பிரசாத், ஒருவனை எட்டிப் பிடிக்க முயன்று கீழே விழுந்து கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் கசிவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விரட்டிச் செல்ல, அப்பகுதியில் நின்ற இளைஞர்களும் உதவிக்கு வர, தப்பி ஓடிய ஒருவனைப் பிடித்து அவன் நிறுத்திய காரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து பார்த்தபோது காரில் ஒரு அரிவாள், செல்ஃபோன்கள் ஆகியவை சிக்கின. அந்தக் கார், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையத்தில் வாடகைக்கு எடுத்து ஓட்டுநரைக் கீழே தள்ளிவிட்டு திருடிக்கொண்டு வந்தது என்று போலீசார் வயர்லெஸ் மூலம் சொன்ன கார்தான் என்பதும் அந்தக் காரை மதுரையைச் சேர்ந்த வேலுப்பாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவர் திருடி வந்ததும், வேலுப்பாண்டிதான் சிக்கியுள்ளான் என்பதும் தெரிய வந்தது.

 

The car number heard on the wireless ... The policeman who stubbornly chased after seeing it in person

 

காவலர் பிரசாத் சினிமா காட்சிகளை மிஞ்சும்படி சாலையில் விழுந்து காயமடைந்து கார் திருடனை விரட்டிப்பிடித்ததை அங்கு கூடிநின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாராட்டினார்கள். அந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி வெளியான நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, பிரசாத்தின் நினைவுத் திறனையும் உயிரைப் பணயம் வைத்து கார் திருடனை விரட்டிப் பிடித்ததையும் பார்த்து உடனே ரூ. 25 ஆயிரம் வெகுமதி அறிவித்ததுடன் ஃபோனில் தொடர்புகொண்டு பாராட்டினார். தொடர்ந்து தஞ்சை எஸ்.பி ரவ்ளிப்பிரியாவும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை வந்த திருச்சி மண்டல் ஐ.ஜி பாலகிருஷ்ணன், பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டியதோடு, “மிகுந்த நினைவுத்திறனோடு நொடிப் பொழுதில் அந்தக் காரை அடையாளம் கண்டு, தனது உயிரை துச்சமாக நினைத்து குற்றவாளியை விரட்டிப் பிடித்து, காயமும் அடைந்திருக்கும் பிரசாத்தை பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது பாராட்டுகிறேன். இதே போல காவலர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவலர் பிரசாத்தை நேரில் அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். மற்றொரு பக்கம் பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இப்படி பல தரப்பிலிருந்தும் காவலருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. உயிரைப் பணயம் வைத்து பிரசாத் பிடித்த வேலுப்பாண்டியை செய்யாறு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.