Skip to main content

வேப்பூர் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதல்… 4 பேர் பலி.. விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமானமின்றி மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

 car lorry incident  near cuddalore

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி மற்றும் உறவினர்கள் குடும்பத்தோடு விருத்தாச்சலம் அருகேயுள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் மொட்டை அடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். பெரியநெசலூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென, இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் மாவட்டம் ஆரகலூர் கிராமத்தைச் சேர்ந்த குணப்பிரியன் என்பவர் இருசக்கர வாகனத்துடன் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.

 

அப்போது எதிரே மீன் ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராவிதமாக, பலமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்துவந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

 

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே வேலுசாமி மனைவி ரேவதி மற்றும் அவருடைய மகள் பவானி, பரிமளா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் எதிரே வந்த மீன் லாரயின் கிளீனர் லோகநாதனும் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். மேலும் விபத்தில் சிக்கிய அறிவரசன், பிரித்திவி சாய், ரேணுகாதேவி, மணிமேகலை, டிரைவர் தேவா ஆகியோரை பலத்த காயத்துடன் வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் பெரம்பலூர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

 

 car lorry incident  near cuddalore

 

இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், காப்பாற்ற மனமில்லாமல், மீன் ஏற்றி வந்த லாரியில் சிதறிய மீன்களை பொதுமக்களில் சிலர் அள்ளிச் சென்றனர். மனிதாபிமானம் இல்லாத மக்களின் செயல் வேதனையளித்ததாக இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.