மாதிரிப்படம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி உட்பட மாணவர்கள் 5 பேர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் இருக்கும் தனது நண்பரைப் பார்ப்பதற்காக காரில் வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள கொண்டபள்ளி அருகே சாலையோரம் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான பம்பு சென்டர் ரூம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரை ஓட்டிவந்த லெனி (வயது 20) மற்றும் கிளிப்பேடு (வயது 20) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த சுதீப் டேவிட் ஜாக்சன், மாணவி சாரோன் ஆகிய மூன்று பேரைப் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.