Skip to main content

பைக் மீது கார் மோதி விபத்து! பரிதாபமாக பலியான குழந்தை! 

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Car Bike accident kid passed away

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இருவேல் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மகள் கவிநிலவு(8). இவர், காரப்பட்டு என்ற ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது பெரியப்பாவின் மகள் ஈஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கவிநிலவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். பின் சிகிச்சை முடிந்து அவர்கள், காரப்பட்டு பள்ளி நோக்கி  வந்தனர். 

 

இவர்கள், இருவேல் பட்டு தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று இவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கவிநிலவு உயிரிழந்தார். பலத்த காயத்துடன் ஈஸ்வரி மீட்கப்பட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 


இது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, டி.எஸ்.பி பார்த்திபன், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கர தாஸ், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


அப்போது, அப்பகுதி மக்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன இதனை தடுப்பதற்கு இப்பகுதி நெடுஞ்சாலையில் பேரிகார்டு அமைக்க வேண்டும். மேலும், வேகத்தடை அமைப்பதோடு இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும். அதன் மூலம்தான் விபத்துக்களை தடுக்க முடியும் என்றனர். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.