ADVERTISEMENT

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர முடியாது! -மத்திய வெளியுறவுத்துறை பதில் மனு!

08:53 PM Apr 16, 2020 | kalaimohan

இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க இயலாது என மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்நிலையில், மலேசியாவில் சிக்கியுள்ள 350 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பாக வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT


இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகிவிடும் எனவும், ஊரடங்கு சமயத்தில் வெளிநாட்டில் தங்கி உள்ளவர்களை இந்தியா கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், சிறப்பு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை சொந்த நாடு திரும்ப மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ளதுபோல, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT