ஓடிஆர் கணக்கு வைத்துள்ள தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை வரும் பிப்ரவரி 28- ஆம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சேர்க்க வேண்டும் என்று தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இ.ஆ.ப., வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration- OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வரும் பிப்ரவரி 28- ஆம் தேதிக்குள், தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 1800- 419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்புக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.