Skip to main content

“காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

"Cancer Research Institute in Kanchipuram." - Minister M. Subramanian

 

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் புதிதாக 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அது அமைப்பது தொடர்பாகவும் மேலும் 25 ஆரம்ப மற்றும் 25 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைப்பது  குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம். 

 

தமிழகத்தில் 32 இடங்களில் மருந்துக் கிடங்குகள் உள்ளன. புதியதாக ஐந்து மருந்துக் கிடங்குகள் கட்டுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் இந்தாண்டு 800 இடங்களில் நடத்தப்பட உள்ளன. மருத்துவத் துறையில் மொத்தமாக 4308 காலிப் பணியிடங்கள் இரண்டு மாத காலத்திற்குள் நிரப்பப்படும். நியூரோ அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

 

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக  இரண்டு மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைத்தனர். இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்துப் பேசி உள்ளோம். விரைவில் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும். தமிழ்நாட்டில் 1303 ‘108’ ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கினார்கள். ஆனால் அது தவறு. மருந்துத் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை தான் உள்ளது.

 

கொரோனா தடுப்பூசி 6.90 லட்சம் உள்ளது. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்த வரவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் நிறுவனத்திற்கு இணையாக கட்டி வருகிறோம். ஒரு ஆண்டுக்குள் அது பயன்பாட்டிற்கு வரும். தமிழ்நாட்டில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் 427 தான் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள். அதில் தான் 30 படுக்கைகள் வசதி இருக்கும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 30 படுக்கைகள் வசதி இல்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.