Skip to main content

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. 

 

sivapunniyam


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.எஸ்.மாசிலாமணியும் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது டெல்டா விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
 

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சேவை சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறது.  
 

இதனால் தற்காலிகமாக ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் 2016-ம் ஆண்டு மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையின்படி, மீத்தேன், ஷேல்  காஸ் உள்ளிட்ட பலவகை எண்ணெய் எரிபொருள் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து வேதனையை மூட்டியது. 
 

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மரபுசாரா எண்ணெய் எடுப்பு பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்று சூழல் அமைச்சகத்திற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. இதனை ஏற்று அந்நிறுவனம் மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவும், சுற்று சூழல் அறிக்கை, சுற்றுசூழல் மேலாண்மை அறிக்கை தாக்கல் உள்ளிட்ட 32 நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மறைமுகமாக ஆதரித்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது.
 

திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மெலி, கருக்கங்குடி, கர்ணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர், வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழகொத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. சாதரண ஏழை விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் நிரம்ப வாழும் இப்பகுதியில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரமும், ஜீவாதாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தற்கொலையை தவிர வேறு வழியில்லாத நிலையை அரசே உருவாக்குவது வேதனையளிக்கிறது.
 

சுற்று சூழலுக்கும், விவசாயத்துக்கும், பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களின்படி 247 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி அளித்து மக்களை எடப்பாடி அரசு அச்சப்பட வைக்கிறது’’ என்றவர்கள்.
 

மேலும், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அமைத்து அப்பகுதியில் சுற்றுச்சூழலையை நாசப்படுத்தியதுடன், கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கும், அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிர் பலிக்கும் காரணமான  வேதாந்த குழுமத்திற்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையும். அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை போவதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் அதிமுக உள்ளிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவது மக்களை மேலும் வஞ்சிக்கும் செயலாகும். காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாத்திட ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.’’ என்று கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.