இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது.
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தற்போது முரளிதரன் தன்னுடைய விளக்க கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, "தன் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யும் முழு உரிமை நடிகர்களுக்கு உண்டு. ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது. இம்ரான்கானாக ஷாருக்கான் நடிக்க முடியுமா? அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார்.