
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் கல்குவாரி உள்ளது. அந்த குவாரியை குத்தகைதாரர் பவுன் நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த கல்குவாரியில் வேலை செய்த மூன்று பேர் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிர் இழந்ததாகவும், மற்ற இருவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேத்தூர் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த பவுன் குத்தகைக்கு எடுத்து நடத்திவரும் அந்த கல்குவாரியில் தொழிலாளர்கள் கற்களை அடுக்கி வந்துள்ளனர். அப்போது, 30 அடி உயரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜபாளையம், இளைந்திரைகொண்டானைச் சேர்ந்த மாரிக்கனி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மற்றும் சாமிராஜா ஆகியோர் கீழே தவறி விழுந்துள்ளனர். அவர்களில் தலையில் பலத்த காயமடைந்த மாரிக்கனி (வயது 50) சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துமாணிக்கமும் சாமிராஜாவும் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சேத்தூர் காவல்துறையினர் மாரிக்கனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குத்தகைதாரர் பவுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.