திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இஸ்லாமியர்கள் 200- க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 20 ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இரவில் போராட்டம் நடத்தக்கூடாது எனச்சொல்லி வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்ட பந்தலுக்கு வந்து கலைந்து போகச்சொல்லி உத்தரவிட்டனர்.
இதனால் இஸ்லாமியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இடத்தில் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை கேள்விப்பட்டு இஸ்லாமிய பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.