Skip to main content

தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் அவதி..! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Erode People suffering from vaccine shortage ..!

 

நாடு முழுக்க கரோனாவின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவல்லை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், தொடர்ந்து  18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கும் என  இந்திய அளவிலும், தமிழகத்திலும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

 

ஈரோடு மாவட்டத்திலும் இந்த இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொது மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதேபோல் தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி போட மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் தடுப்பூசி எண்னிக்கை குறைவாக இருப்பதால்  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் டோஸ் போடாமல் திணறி வருகின்றனர். ஆனால், அதேநேரம் கோவிஷில்டு தினமும் 100 பேரு வீதம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 946 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள 39 ஆயிரத்து 50 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அதேசமயம், மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. எந்த நாளில் எத்தனை பேருக்கு எந்த இடத்தில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் மக்கள் குழம்பி விருகின்றனர். 

 

இந்த நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காந்திஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், அகத்தியர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், கருங்கல்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், வீரப்பன்சத்திரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், ராஜாஜி புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், நேதாஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பிபி அக்ரகாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பெரியசேமூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், சூரம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும் கோவிசீல்டு தடுப்பூசி 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்பட்டது. 

 

இதற்காக காலையிலேயே வந்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டது. அதேநேரம் கோவாக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இந்நிலையில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 100 பேருக்குதான் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தெரியாமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300  முதல் 500 பேர் வரை திரண்டனர். ஆனால், அவர்களுக்கு டோக்கன் வழங்க முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த மக்கள், தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டோக்கன் கிடைக்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதைப்போல் பிபி அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் அதிக அளவு கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைப் போன்று பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.