Skip to main content

இடைத்தேர்தல் விதிகள்; சரியுமா ஜவுளி வியாபாரம்; வியாபாரிகள் வேதனை

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

 By-election rules; okay textile trade; traders suffer

 

ஈரோடு ஜவுளி சந்தை தமிழக அளவில் பிரபலமானது. பன்னீர்செல்வம் பார்க் அருகே இந்த ஜவுளி சந்தை செயல்படுகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சந்தை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். சாதாரண நாட்களில் ரூபாய் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.

 

சந்தையன்று ரூபாய் எட்டு கோடி முதல் 10 கோடி வரை விற்பனை நடைபெறும். பண்டிகை காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்து கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

 

மூன்று நிலைகளில் கண்காணிப்பு குழுவினர், ஐந்துக்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வர பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ரூபாய் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரொக்கப் பணமாக கையில் கொண்டு வருவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் 24ந் தேதி கூடிய ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டும் வந்திருந்தனர். இந்த நாளில்  ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 

 

பொதுவாக மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் 50 சதவீதம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெறும் 5 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்பதால் வியாபாரிகள் கவலையோடு உள்ளார்கள். இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் கோடி கோடியாக செலவு செய்வது வாக்காளர்களுக்கு ஆயிரம் ஆயிரமாக பணத்தை கொடுப்பது ஒருபுறம் நிச்சயம் நடந்தே தீரும். அதை அரசு எத்தனை சட்டம் போட்டாலும்; எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் தடுக்கவே முடியாது. ஆனால், உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டும் இந்த ஜவுளி தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் எல்லோரது வாழ்வும் அடுத்த ஒரு மாதம் வரை வருமானம் இல்லாத வாழ்வாக மாறிவிட்டது என பரிதவிப்போடு கூறுகிறார்கள் ஜவுளி தொழிலில் ஈடுபடுவோர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.