சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் 10 போலீசார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபரானஇவரை கடத்தி அவரிடம் 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக புகார் ஒன்று சென்னை காவல்துறையில் கொடுக்கப்பட்டது. தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், திருமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இருந்த சிவக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் தொழிலதிபர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையே நீடித்தது. இந்நிலையில் இதில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ராஜேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதனடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிஐ இந்தபுகாரில் புதிதாக வழக்கைப் பதிவு செய்துள்ளது. அதிலும் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.