Skip to main content

பெண்ணை ஏமாற்றிய வியாபாரிக்கு சிறைத்தண்டனை...!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

Businessman jailed for cheating on woman

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள வைரவரபுரத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி முருகேசன் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் நெருக்கமாகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை பேசி, அந்தப் பெண்ணுடன் முருகேசன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

 

கர்ப்பம் அடைந்த பிறகு, முருகேசனிடம் சென்ற அந்த இளம் பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் முருகேசன் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அப்பெண் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டதன் பேரில், ஊர் மக்கள் பஞ்சாயத்துப் பேசி அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து அந்தப் பெண்ணை முருகேசன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். வேறு வழி தெரியாமல் முருகேசனும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள, பின்னர் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழவில்லை.

 

அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து, தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அந்தப் பெண், கடந்த 2001 ஆம் ஆண்டில் இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் முருகேசன் தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமக்கு நீதிகிடைக்கக் கோரியும் புகார் அளிதுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

 

அதன் பிறகு இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (05.03.2021) இந்த வழக்கில் நீதிபதி சாவி அவர்கள் தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார். சிறை தண்டனை கிடைக்கப் பெற்ற முருகேசனை போலீசார் பலத்தப் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.