Skip to main content

தற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Buses operated by temporary staff


"அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை எடுத்து அரசின் மற்ற நிர்வாகத்திற்குச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காகப் பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25ஆம் தேதி முதல் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்பே அறிவித்தது. இதையும் தமிழக அரசு பொருட்படுத்தாததால், தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி 25ஆம் தேதி காலை போராட்டத்தில் குதித்தனர். 

 

மக்கள் மத்தியில் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்றைய தினம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. பணிக்கு வராத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி உட்பட 13 பணிமனைகளில் தினமும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள்  மாவட்டத்திற்குள்ளும் இயக்கப்பட்டு வருகின்றன. 

 

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில், அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்களை இயக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி 25ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் பெரும்பாலும் இயங்கியது. பெருமளவு பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிப்பட்டனர். ஓடிய பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த உடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்யத் தொடங்கி விட்டோம். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பணிமனைகளில் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.